சோழப் பேரரசின் முழுமையான வரலாறு, கலாசாரத்தை எண்ணி பெருமை கொள்வதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
134வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நெதர்லாந்து பயணத்தின்போது, சோழர் கால தொன்மையான தாமிர பட்டயங்கள் பாரதத்திடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டதாகக் கூறினார்.
இதில் 21 பெரிய மற்றும் 3 சிறிய தாமிர பட்டயங்கள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார். ராஜராஜசோழன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது தொடர்பாகவும், ஆனைமங்கலம் என்ற ஒரு கிராமத்தை, புத்த விஹாரம் அமைக்க தானமாக அளித்தது தொடர்பாக குறிப்புகள் இருந்ததாகவும் பிரதமர் மோடி கூறினார்.
தாமிர பட்டயங்களில் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சாதனைகள் பற்றியும், சோழ சாம்ராஜ்ஜியத்தின் கடல் வல்லமை எவ்வளவு மகத்தானது என்பது குறித்தும் விரிவாக விவரிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசிய நாடுகளோடு சோழர்களுக்கு இருந்த தொடர்புகள் பற்றி தகவல்களும் செப்பேடுகளில் உள்ளன என்றும், அவர் குறிப்பிட்டார். பாரதத்தின் மரபு செல்வங்களை பாதுகாக்கும் முயற்சியில் மத்திய அரசு தொடர்ந்துசெயல்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
















