கல்விக் கட்டண விவரங்களை பள்ளிகளின் விளம்பர பலகைகளில் வெளியிடுவதை கட்டாயமாக்கிய அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கல்விக் கட்டணம் கருப்பு பணம் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயக்குனரும் இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், இதை எதிர்த்து அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, கல்விக் கட்டணம் என்பது கருப்புப் பணம் அல்ல என்பதால் அதன் விவரங்களை விளம்பர பலகையில் வெளியிடலாம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு ஜூன் 18-ஆம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
















