சென்னையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்ட காவல் ஆளிநர்களுக்கு சென்னை காவல் ஆணையர் விருது வழங்கி கவுரவித்தார்.
சென்னையில் பணியாற்றும் காவலர்களை கவுரவிக்கும் விதமாக எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்கும் விழா நடத்தப்பட்டது. இதில் மோட்டார் வாகனப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் எந்த குற்றசம்பவங்களிலும் ஈடுபடாத காவல் ஆளிநர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்ட நிலையில் சென்னை காவல் ஆணையருடன் விருது பெற்ற காவலர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
பின்னர் விழா மேடையில் பேசிய காவல் ஆணையர் பிற அரசு துறைகளை விட காவல்துறையை எளிதில் அடையாளம் காட்ட முடியும் எனவும், அனைத்து தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சீருடை என்பதில் பெருமை அடைவதாகவும் தெரிவித்தார்.
















