ரஷ்யா தனது அதிநவீன Su-57 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவுடன் இணைந்து உருவாக்க தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். இது இந்திய விமானப்படையின் திறனை அதிகரிக்க ரஷ்யா முன்வைத்துள்ள மிக முக்கிய அறிவிப்பாக பார்க்கப் படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
நீண்ட காலமாகவே தனது சொந்த மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானத்தை உருவாக்கும் AMCA Advanced Medium Combat Aircraft செயல்திட்டத்தில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
2030-க்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த ஐந்தாம் தலைமறை ஸ்டெல்த் போர்விமானத்தில் மேம்பட்ட மறைந்திருந்து தாக்கும் திறன், பிரத்யேக ஆயுத அறைகள், சூப்பர்குரூஸ் திறன், சென்சார் ஃபியூஷன் மற்றும் அடுத்த தலைமுறை ஏவியானிக்ஸ் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
மிகச்சிறந்த இயக்கத் திறன், எதிரியின் ரேடாருக்குப் புலனாகாத stealth தொழில்நுட்பம் மற்றும் நவீன ஏவியானிக்ஸ் (avionics) தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ள ரஷ்யாவின் முதன்மையான போர் விமானமான சுகோய் Su-57, நிலம், வானம் மற்றும் கடல்வழி இலக்குகளுக்கு எதிரான பலதரப்பட்ட போர் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
சீனாவின் J-35 மற்றும் அமெரிக்காவின் F-35 ஆகியவற்றுடன் ஒப்பிடும் போது ரஷ்யாவின் சுகோய் விமானம் முன்னணியில் உள்ளது.
ஏற்கெனவே ஏவியானிக்ஸ் (Avionics) எனப்படும் மின்னணுவியல் கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் இதர முக்கிய அம்சங்களில் முழுமையான திருப்தி அடையாத இந்தியா 2018-ல் ரஷ்யாவின் சுகோய் 57 போர் விமான கூட்டுத் தயாரிப்புத் திட்டத்திலிருந்து பின்வாங்கியது.
குறிப்பாக, இந்த சுகோய் விமானத்தில் ஒரு ஸ்டெல்த் (Stealth) ரகப் போர் விமானத்திற்குரிய அத்தியாவசியப் பண்புகள் மற்றும் ரேடார்களில் சிக்காத வடிவமைப்பு குறைவாக இருப்பதாக இந்திய அதிகாரிகள் கருதியதாக கூறப்பட்டது.
Fifth Generation Fighter Aircraft திட்டத்திலிருந்து விலகிய போதிலும், கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மீண்டும் ரஷ்யாவின் Su-57 போர் விமானங்களைக் கொள்முதல் செய்வது குறித்துப் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வந்தன.
சுமார் 50 Su-57 போர் விமானங்களை ரஷ்யாவிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதற்கிடையே வெள்ளை மாளிகையில் தன்னை சந்தித்த பிரதமர் மோடியிடம், அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ரக போர் விமானங்களை இந்தியாவுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், சுகோய் அதிநவீன விமானத்தை ரஷ்யா தனித்தே உருவாக்கிய போதிலும், 5ஆம் தலைமுறை மல்டி-ரோல் போர் விமானத் திட்டத்தில், எந்தவிதக் கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் இன்றி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு Su-57 போர் விமானத்தின் முழுமையான மூலக் குறியீடு மற்றும் முழுத் தொழில்நுட்பத்தையும் எவ்வித நிபந்தனையுமின்றி இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா அதிகாரப்பூர்வமாக சம்மதித்துள்ளது.
தொடர்ந்து ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்தை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான முழுத் தொழில்நுட்ப மாற்றீடு (Transfer of Technology) உட்பட, இந்தியாவின் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த Su-57 போர் விமானங்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான முதலீட்டு விபரங்கள் குறித்து ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
பரஸ்பர நலன்களைப் பேணும் வகையில், இந்தியாவிற்கு தேவைப்படும் அனைத்து விதமான அதிநவீன ராணுவ உபகரணங்களையும் தங்கு தடையின்றி வழங்க ரஷ்யா எப்போதும் தயாராக உள்ளதாகவும் ரஷ்யாவின் ரோஸ்டெக் பாதுகாப்பு கூட்டமைப்பின் CEO செர்ஜி செமேசோவ் தெரிவித்துள்ளார்.
















