இளைஞர்களின் பற்களை பிடுங்கிய வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாத ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்குக்கு நெல்லை குற்றவியல் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங், விசாரணைக்கு அழைத்துவரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையமும் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்யா முன்பு மீண்டும் விசாரணை வந்தது.
அப்போது, வழக்கில் தொடர்புடைய காவல் அதிகாரிகள், ஏட்டு உள்ளிட்ட 8 பேர் விசாரணைக்காக ஆஜராகினர். ஆனால், முக்கிய நபரான பல்வீர் சிங் ஆஜராகாததால் நீதிபதி சத்யா கடுமையாகக் கடிந்து கொண்டார்.
மேலும், அடுத்தகட்ட விசாரணையின் போது ஐபிஎஸ் அதிகாரி கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
















