ஆந்திராவில் அரசு பேருந்தில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், பயணிகள் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம் ஜக்கய்யபேட்டாவில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து, என்டிஆர் மாவட்ட எல்லைக்குள் வந்தபோது திடீரென தீப்பற்றி எரிந்து கரும்புகை குபுகுபுவென வெளியேறியது.
இதைக் கவனித்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை சாலையோரமாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து பயணிகள் சிலர் அச்சத்தில் உடனடியாக கீழே இறங்கிய நிலையில், பலர் ஜன்னல்கள் வழியாக குதித்து உயிர் தப்பினர்.
தகவலறிந்துவந்த தீயணைப்பு படையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். என்டிஆர் மாவட்ட எல்லைக்குள் பேருந்து வந்தபோது, என்ஜினில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
பயணிகள் உடனடியாக வெளியேறியதால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசாரும், போக்குவரத்து துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















