சென்னை துறைமுகத்தில் ரசாயன வாயு கசிந்து, தலைமை செயலகத்தில் காற்று மாசடைந்தது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை ஆட்சியர் விளக்கமளிக்க தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை காமராஜர் சாலை மற்றும் தலைமை செயலகத்திற்கு எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2ஆம் தேதி மதியம் 12.15 மணியளவில் வெள்ளை நிறத்தில் ரசாயன புகை சூழ்ந்தது. இதனால் தலைமை செயலகம், ரிசர்வ் வங்கி, சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய பகுதிகளில் காற்று மாசடைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கர்ஹவா அமர்வு, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை துறைமுகம், சென்னை மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
















