மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்காமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆண்டுதோறும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், நடப்பாண்டு திறக்கப்படாததால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் காவிரி நீர் திறப்பை நம்பியே குறுவை சாகுபடி விவசாயிகள் உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே, விவசாயக் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவு கடனை மட்டும் அடைப்பதாக கூறி, தமிழக அரசு ஏமாற்றியுள்ளதாக சாடியுள்ள அவர், தற்போது நீர் திறப்பு செய்யாமல் 134 கோடி ரூபாய்க்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர் எனக்கூறியுள்ள அவர், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல், ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளார்.
மேலும், மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
















