ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை அவர்கள் அம்பலப்படுத்தவும் தொடங்கியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது விரிவாக பார்க்கலாம்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை, பாகிஸ்தான் அரசு தொடக்கம் முதலே தனது துருப்பு சீட்டாக பயன்படுத்தி வந்தது. அங்கு வசித்த மக்களை மூளைச்சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராகவே கருத்துகளை தெரிவிக்க வைத்தது. ஆனால், அந்த குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள்தான் தற்போது பாகிஸ்தானுக்கு முதன்மை தலைவலியாக மாறியுள்ளனர்.
பாகிஸ்தானின் சூழ்ச்சி குறித்த இந்த வரலாறு 1961ம் ஆண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ஆண்டு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மிர்பூர் மாவட்டத்தில் மங்களா என்ற மிகப்பெரிய அணை கட்டும் பணி தொடங்கியது.
இந்த அணை சுமார் 3,140 மீட்டர் நீளமும், 147 மீட்டர் உயரமும் கொண்டது என்பதால், சுமார் 280 கிராம மக்கள் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் நிலை ஏற்பட்டது. அத்துடன், ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வேறு பகுதிக்கு இடம்பெயர வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர்.
அந்த சமயத்தில் இந்த அணை கட்டுமானத்தில் பிரிட்டன் அரசும் ஒரு முக்கியப் பொறுப்பாளராக இருந்தது. எனவே, அணைக்காக தங்களது நிலங்களை இழந்த மக்கள் தனது நாட்டிற்கு வந்து வேலை செய்வதற்கான பணி அனுமதி விசாக்களை பிரிட்டன் வழங்கியது.
இதன் மூலம் மிர்பூர் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் லண்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர். நாளடைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தங்களது உறவினர்களையும் இங்கிலாந்துக்கு அழைத்து கொண்டனர். இன்றைய தேதிக்கு பிரிட்டனில் வாழும் ஒட்டுமொத்த பாகிஸ்தானிய வம்சாவளியினரில் 70% பேர் இவ்வாறாக அங்கு சென்றவர்கள்தான்.
இங்கிலாந்து சென்ற இந்த மக்கள் வெறும் உடல் உழைப்பாளர்களாக மட்டும் இருந்துவிடவில்லை. அந்நாட்டு உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் பிரதான சக்தியாக உருவெடுத்தனர். முக்கிய வாக்கு வங்கியாகவும் மாறினர்.
இந்த இடத்தில்தான் பாகிஸ்தான் அரசு தனது சூழ்ச்சி வலையை விரித்தது. லண்டன் உள்ளிட்ட முக்கிய பகுதியில் வாழ்ந்து வந்த பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களை மூளை சலவை செய்து, இந்தியாவுக்கு எதிராக பேச வைத்தது.
அந்த மக்களை கொண்டு இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களையும், பேரணிகளையும் ஒருங்கிணைத்தது. பிரிட்டிஷ் அரசியல்வாதிகளும் அம்மக்களின் வாக்குகளை பெற, இந்தியாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசவும் தொடங்கினர்.
இவ்வாறாக, காஷ்மீர் மக்கள் இந்தியாவுக்கு எதிராகவும், தங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை உலகளவில் உருவாகியது பாகிஸ்தான்.
இந்த சூழலில்தான், பாகிஸ்தானின் தவறானப் பொருளாதார கொள்கைகளால் மிர்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் கடும் சிக்கலை சந்திக்க தொடங்கினர். கோதுமை மாவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை தொடவே, அவர்கள் அனைவரும் வீதிக்கு வந்து போராட தொடங்கினர்.
காஷ்மீரிகளின் உரிமைக்காக பாடுபட்டு வருவதாக இதுவரை நடித்து வந்த பாகிஸ்தான், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை உடனே ஒடுக்க தொடங்கியது. அவர்களின் அரசியல் உரிமைகளையும் நசுக்க ஆரம்பித்தது.
மிர்பூர் உள்ளிட்ட மக்கள் போராட்டங்களை முன்னெடுத்தபோது, பாகிஸ்தான் அரசு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது.
பாகிஸ்தானின் இந்த இரட்டை வேடத்தையும், சொந்த மக்கள் மீதான அடுக்குமுறையையும் கவனித்த இங்கிலாந்துவாழ் மிர்பூர் மக்கள் கொதித்தெழுத்தனர். பாகிஸ்தான் அரசு இத்தனை நாளாக தங்களை பகடை காயாக மட்டுமே பயன்படுத்தி வந்தது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.
இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக, அவர்கள் தற்போது பிரிட்டனில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர். பாகிஸ்தானின் உண்மை முகத்தை உலக அரங்கில் அவர்கள் அம்பலப்படுத்தவும் ஆரம்பித்துள்ளனர்.
ஒரு காலத்தில், இந்தியா குறித்த வதந்திகளை பரப்ப பாகிஸ்தான் அரசு எந்த மக்களை ஆயுதமாக பயன்படுத்தியதோ, அந்த மக்களே தற்போது பாகிஸ்தானின் அஸ்திவாரத்தை அசைக்க தொடங்கியுள்ளனர்.
















