நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசு மருத்துவமனைகளில் அனுமதியின்றி ரீல்ஸ் எடுப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் அனுமதியின்றி வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் மருத்துவமனைகளில் வீடியோ பதிவு செய்து ரீல்ஸ் வெளியிடுவது கண்டிக்கத்தக்கது என்றும், அவற்றை சமூக வலைதளங்களில் இருந்து தாமாக முன்வந்து நீக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நோயாளிகளின் தனியுரிமையை மீறுவது சட்டப்படி குற்றம் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
















