ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டைத் தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படும்போது, மின்னணு எடை எந்திரங்கள் மூலம் அளவிடப்படாததால் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் கடத்தல் காரணமாக ஆண்டுக்கு ₹200 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் வீணடிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதுமாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். .
கிடங்குகளில் மின்னணு எடை எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், ஊழியர்களால் கைமுறையாகவே (manually) எடைகள் பதிவு செய்யப்படுவது திட்டமிட்ட ஊழலுக்கு வழிவகுக்கிறது.
50 கிலோ எனப் பதியப்படும் மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது 3 கிலோ வரை குறைந்துவிடுகின்றன. இவ்வாறாக, போக்குவரத்தில் ஏற்பட்ட கசிவு என்ற போர்வையில் பல லட்சம் டன் தானியங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இந்த இழப்பைச் சரிசெய்ய, மக்கள் வாங்காத அரிசியை வாங்கியது போலப் பொய்க் கணக்கு எழுத ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். ஊழலை ஒழித்து, முறைகேடற்ற ஆட்சி அமைக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் திரு. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை இப்போதும் தொடரவிடுவது ஏற்புடையதல்ல.
எனவே, உடனடியாக அனைத்துக் கிடங்குகளிலும் மின்னணு எடைமேடைகளை அமைத்து, முறைகேடுகளைத் தடுத்து மக்கள் வரிப் பணம் வீணாவதை நிறுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















