அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 62 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 959 இடங்களில் 78 ஆயிரத்து 827 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும், 31 ஆயிரத்து 235 மாணவர்கள், 47 ஆயிரத்து 572 மாணவிகள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதுகலை படிப்புகளுக்கு 110 கல்லூரிகளில் 24 ஆயிரத்து 334 இடங்கள் உள்ளன என்றும், முதுகலை படிப்புகளுக்கு இதுவரை 12 ஆயிரத்து 528 பேர் பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், பி.எட் படிப்புகளுக்கு 21 கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 40 இடங்களுக்கு 3 ஆயிரத்து 381 பேர் பதிவு செய்துள்ளதாக கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
















