தவெக ஆட்சியை கவிழ்க்க 35 கோடி ரூபாய் பேரம் பேசிய வழக்கில் முதல் தகவல் அறிக்கை விவரம் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்தாலும் நாங்கள் சொல்வது போல் கேட்டு சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்கு ரூ.35 கோடி வரை பணம் கிடைக்கும் என்றும் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் சிலர் பேசி உள்ளனர்.
இதுதொடர்பாக அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை சந்தித்து இளையராஜா புகார் அளித்தார். புகாரின் பேரில் 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைதான திருநாவுக்கரசு, கார்த்திக், ரமேஷ் ஆகியோர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை சென்னையில் வைத்து சந்தித்து பேசியதாகவும், செந்தில் பாலாஜியும், அசோக் குமாரும் கூறிய அறிவுரையின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவுடன் பேசியதாக வாக்குமூலம் அளித்தனர்.
பேரம் பேசியதை வெளியே சொன்னால் குடும்பத்தினர் உயிரோடு இருக்க முடியாது என திருநாவுக்கரசு மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒத்துழைக்காவிடில் உயிருடன் நடமாட முடியாது என இளையராஜாவை மிரட்டியதாக எஃப்ஐஆரில் தகவல் வெளியாகி உள்ளது. ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளைராஜா அளித்த புகாரை வைத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது கொலை மிரட்டல், குற்றச் சதிக்கு உடந்தையாக இருத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
















