கோவையில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கிற்கு மதுபோதையில் வந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு ஊழியரிடம் கேட்டுள்ளார். இதற்கு ஊழியர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தான் அமைச்சர் சம்பத்குமாரின் அண்ணன் மகன் என்று அந்த நபர் கூறியதுடன், பெட்ரோல் பங்கு ஊழியரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. காயமடைந்த ஊழியர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சம்பவம் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
சம்பவம் குறித்து பெட்ரோல் பங்க் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காட்டூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். அமைச்சரின் உறவினர் எனக்கூறி பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய ராகவேந்திரா மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த ஸ்ரீஜெயராம் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராகவேந்திரா அதிமுகவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, தனது உறவினர் என்று கூறிய நபரை தான் பார்த்ததில்லை – தனது உறவினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அமைச்சர் சம்பத்குமார் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
















