சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2025ல் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுதாக்கல் செய்தார்.
இந்த புகார் மனு, எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தனக்கு எதிரான புகாரை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்யக் கோரி பொன்முடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பொன்முடி தரப்பில், அரசின் அனுமதியை பெறாமல் தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து நடத்த முடியாது என வாதிடப்பட்டது.
மனுதாரர் தரப்பில், பொன்முடிக்கு எதிராக வழக்குத் தொடர அரசிடம் அனுமதி கோரியிருப்பதாகவும், அவர் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய பொன்முடியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
















