10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அவசரகால நிதி உதவியை அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் போர் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆற்றிய தூதரக பங்களிப்பைத் தொடர்ந்து, இந்த நிதி உதவியைப் பாகிஸ்தான் கேட்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த ஏப்ரலில் ஒரே நேரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 3.5 பில்லியன் டாலர் கடனைத் திருப்பிச் செலுத்திய பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு பெருமளவில் சரிந்து வருகிறது.
இப்போதும் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு சீனா மற்றும் சவூதி அரேபியா வழங்கும் தற்காலிக கடன்களையே பெரிதும் நம்பியுள்ளது.
கடந்த ஜனவரியில் பாகிஸ்தானின் அந்நிய செலாவணி 2021-ஆம் ஆண்டைப் போல இந்த ஆண்டின் ஆண்டின் இறுதிக்குள் 20 பில்லியன் டாலருக்கு குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சர்வதேச நிதியத்தின் 7 பில்லியன் டாலர் நிபந்தனை கடன் திட்டத்தின் கீழ் அரசு உள்ளது. இதற்காக நாட்டில் வரிகளை உயர்த்துவது, அரசுச் செலவுகளைக் குறைப்பது என சர்வதேச கடன் நிபந்தனைகளை நடைமுறைபடுத்தி வருகிறது.
இந்நிலையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான், தனது அந்நியச் செலாவணி கையிருப்பை பலப்படுத்தவும், நாணயத்தின் மதிப்பை காப்பாற்றவும் முயற்சி எடுத்து வருகிறது.
மிக அரிதாகவே பிற நாடுகளுக்கு வழங்கப்படும் அமெரிக்க நிதித்துறையின் அவசரகால நிதி உதவியைப் பெற கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்கக் கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டை சந்தித்த பாகிஸ்தானின் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்புக் குறித்து இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், அதிக அமெரிக்க முதலீட்டை ஊக்குவிப்பதற்கும்,புதிய வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும் இரு தரப்பினரும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியதாக பாகிஸ்தான் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிதிஉதவி என்பது அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வழங்கும் நிலையான கரன்சி ஸ்வாப் லைன்களில் இருந்து வேறுபட்டதாகும்.
உறுதியான டாலர் வரத்து அல்லது உத்தரவாதங்கள் மூலம் ஒரு நாட்டின் நாணயத்தையும் அந்நியச் செலாவணியையும் ஸ்திரப்படுத்தவே இந்த நிதியுதவியை அமெரிக்க கருவூலத் துறை செய்கிறது.
இதுவரை இந்த நிதியுதவியை 2002-ல் உருகுவே மற்றும் 2025-ல் அர்ஜென்டினாவும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளன.
ஏற்கெனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குடும்பத்தின் வேர்ல்ட் லிபர்ட்டி ஃபைனான்ஷியல் நிறுவனத்துடன் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனைக்காக பாகிஸ்தான் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் ‘ரெகோ டிக்’ தங்க மற்றும் செப்புச் சுரங்கத் திட்டத்தில் அமெரிக்க ஏற்றுமதி-இறக்குமதி வங்கி 1.2 பில்லியன் டாலரை முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதலாக நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்துக்கு சொந்தமான ரூஸ்வெல்ட் ஹோட்டலை மறுசீரமைக்கவும் ட்ரம்ப் நிர்வாகத்துடன் பாகிஸ்தான் அரசு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப் படுகிறது.
10 பில்லியன் டாலர் நிதி உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தால், அது பாகிஸ்தானுக்கு உடனடி பொருளாதார நிவாரணமாக அமைவதுடன், சர்வதேச அளவில் அந்நாட்டின் கடன் தரத்தையும் உயர்த்த உதவும் என்று கூறப்படுகிறது.
ட்ரம்ப் நிர்வாகத்துடன் பொருளாதார உறவுகளை ஆழப்படுத்தி வரும் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் அவசர நிதி உதவி என்பது பணப்புழக்கப் பாதுகாப்பை விட மேலானதாக கருதப் படுகிறது.
















