மேற்கு வங்கத்தில் கைதான பாகிஸ்தான் பயங்கரவாதி டெல்லியில் நடந்த நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையை அணிந்து கொண்டு தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகரின் மகனை மர்ம நபர்கள் கடத்த இருந்த நிலையில் ஜார்க்கண்டை சேர்ந்த அபிதா சர்க்கார் என்ற பெண்ணின் சமூக வலைதள கணக்கு கண்காணிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கொல்கத்தாவில் பதுங்கியிருந்த ஹமீம் மொண்டல் என்ற பயங்கர வாதியை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதில் அபிதா சர்க்காரும், ஹமீம் மொண்டலும் இணைந்து பல்வேறு சதி வேலைகளை செய்தது வெளிவந்தது. சமூக வலைதளம் மூலம் முக்கிய பிரமுகர்களின் மகன்களை காதல் வலையில் விழ வைத்து கடத்த இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
மேலும் ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஹமீம் மொண்டல் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தாக்குதலை நடத்த திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து பேசிய சிறப்பு அதிரடி படை ஐஜி, ஜந்தர் – மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் போலீசாரின் சீருடையில் பயங்கரவாதி ஹமீம் மொண்டல் பங்கேற்க இருந்ததும், அங்கு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளதாக கூறினார்.
















