ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரம் பெருகி வருவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், கோவை கிணத்துக்கடவு சுலபம்பாளையம் காமராஜர் காலனியை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த இருவர், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் சடலத்துடன் செல்ஃபி எடுத்து அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் சீர்குலைந்து கிடக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. முதலமைச்சர் விஜய் அமைச்சர்கள் எப்போதும் ‘ரீல்ஸ்’ மோகத்தில் மூழ்கிக் கிடப்பது போலவே, இன்று தமிழக இளைஞர்களும் வன்முறையை ஒரு ‘மாஸ்’ (Mass) செயலாகக் கருதி, கொலை செய்துவிட்டு ரீல்ஸ் எடுக்கும் அளவிற்குச் சீரழிந்து போயிருப்பது வேதனைக்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் தடையின்றி கிடைக்கும் போதைப் பொருட்களும், மதுவுமே இதுபோன்ற மிருகத்தனமான வன்முறைகளுக்கு முக்கியக் காரணமாகும். இளைஞர்களை நல்வழிப்படுத்தத் தவறிய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக
அரசு, வெறும் ‘ரீல்ஸ்’ அரசியலில் மட்டுமே கவனம் செலுத்துவதை விடுத்து, போதைப் பொருள் புழக்கத்தையும் இந்த வன்முறைக் கலாச்சாரத்தையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
















