ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது திட்டமிட்ட தாக்குதல்களை முழுமையாக முடிப்பதற்கு முன்பே பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வேண்டியதாக முன்னாள் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் (CDS) அனில் சௌஹான் நினைவு கூர்ந்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2025 ம் ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் வெளிநாட்டினர் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 26 அப்பாவி பொதுமக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக அதே ஆண்டு மே 7ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இந்த நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ -முகமது ஆகிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளின் தளங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டதுடன் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நான்கு நாட்கள் தீவிரமான ராணுவத் தாக்குதல்களுக்குப் பிறகு பாகிஸ்தானின் வேண்டுகோளுக்கு இணங்க ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கெஞ்சியது குறித்து முன்னாள் முப்படை தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌஹான் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
மே 9ம் தேதி பாகிஸ்தான் தலைவர்களும் இராணுவத் தளபதிகளும் 48 மணி நேரத்தில் இந்தியாவைச் சமாளித்து விடுவோம் எனப் பேசிய நிலையில் வெறும் 8 மணி நேரத்திற்குள் போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் கோரிக்கை வைத்தது ஆச்சரியமளிப்பதாக இருந்தது என ஜெனரல் அனில் சௌஹான் கூறியுள்ளார்.
மே 10-ஆம் தேதி காலை சுமார் 9.30 மணியளவில் ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல் ஹாட்லைன் மூலம் பாகிஸ்தான் தரப்பு உடனடியாகப் பேச விரும்புவதாகத் தெரிவித்ததாக கூறிய ஜெனரல் அனில் சௌஹான், திட்டமிடப்பட்ட பல தாக்குதல்கள் இன்னும் நிலுவையில் இருந்ததால், உடனடியாகப் பதிலளிக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.
முக்கிய ராணுவ இலக்குகளை நிறைவு செய்வதும், தேவைப்பட்டால் பாகிஸ்தானின் ஆழமான பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகள் மீது இந்தியப் படைகளால் தாக்குதல் நடத்த முடியும் என்பதை நிரூபிப்பதுமே இதன் நோக்கமாக இருந்தது என்றும் விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக மே 9 இரவு மற்றும் மே 10 அதிகாலைகளில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டிருந்த நிலையில் திட்டமிட்ட தாக்குதல்களை இந்தியா நிறைவேற்றிவிட்டது என்று பாகிஸ்தான் நம்பியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள ஜெனரல் அனில் சௌஹான், ஏற்கனவே திட்டமிடப்பட்ட கூடுதல் தாக்குதல்களை இந்தியா தொடங்குவதற்கு முன்பே போர்நிறுத்ததுக்கு பாகிஸ்தான் முடிவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் இராணுவ அதிகாரிகளை விட இந்தியத் தளபதிகளுக்குச் சூழல் குறித்த தெளிவான புரிதல் இருந்ததாகவும், அது விரைவான மற்றும் சரியான தகவல்களின் அடிப்படையிலான முடிவுகளை எடுக்க உதவியதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஜெனரல் அனில் சௌஹான், இந்தியாவின் சிறந்த போர்க்கள விழிப்புணர்வுத் திறனைப் பாராட்டியுள்ளார்.
அதாவது , தங்கள் சொந்தத் தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தானின் தாக்குதல்கள் ஆகியவற்றின் விளைவுகள் குறித்த நிகழ்நேர தகவல்கள் இந்தியப் படைகளுக்குக் கிடைத்தன. இத்தகைய ஒருங்கிணைந்த செயல்பாட்டு நிலவரம், தளபதிகள் விரைவாகப் பதிலடி கொடுக்கவும், நடவடிக்கை முழுவதும் முன்னிலையைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவியதாக அனில் சௌஹான் கூறியுள்ளார்.
எதிரியை எப்போதும் தாக்குதலுக்கு உள்ளாகும் நிலையில் வைத்திருக்கும் வகையில் விரைவாக முடிவுகளை எடுப்பதே போர் ஆகும் என்று கூறியுள்ள ஜெனரல் அனில் சௌஹான், விரைவாக முடிவெடுக்கும் இந்தியாவின் திறனே ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறியுள்ளார்.
















