பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, நாட்டின் நிர்வாகக் கட்டமைப்பு முழுமையாகச் சரிந்துவிட்டதாகவும், ராணுவத் தலைமை தளபதி அசிம் முனீரே ஓய்வு உளைச்சல் இல்லாமல் நாட்டுக்காக பணியாற்றிவருவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, பாகிஸ்தான் இன்னொரு ராணுவ புரட்சிக்குத் தயாராகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1947-ல் இந்தியாவில் இருந்து பிரிந்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானதில் இருந்து நான்கு முறை அந்நாட்டில் ராணுவ ஆட்சி ஏற்பட்டுள்ளது. 1958, 1977 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று அரசுகள் ராணுவப் புரட்சிகள் மூலம் கவிழ்க்கப் பட்டுள்ளன.
1958-ல் அயூப்கான் இதைச் செய்தார். 1969-ல் யஹ்யா கான் அதைப் பின்பற்றினார். 1977-ல் ஜியா-உல்-ஹக் சுல்பிகர் அலி பூட்டோவை வெளியேற்றினார்; 1999-ல் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் நவாஸ் ஷெரீப்பை பதவியிலிருந்து அகற்றினார்.
இவையாவும் classic coup என்ற முறையில் இராணுவத் தலைமை தளபதியும் இராணுவமும் அரசியலமைப்பை ஓரங்கட்டி விட்டு ராணுவ ஆட்சியை அமல்படுத்தினர்.
இப்படி இராணுவப் புரட்சி இல்லாமலும் ராணுவம் நாட்டின் அரசு அதிகாரத்தைத் தன்வசம் வைத்துக் கொள்ள முடியும். இது இன்னொரு வகையான ஆட்சிக் கவிழ்ப்பாகும்.
இந்த வகை ஆட்சிக் கவிழ்ப்பில் அரசியலமைப்புச் சட்டம் அப்படியே நீடிக்கும். தேர்தல்கள் நடத்தப் படும். நாடாளுமன்றம் செயல்படும். பிரதமர்கள் வருவார்கள். போவார்கள். ஆனால் முக்கிய முடிவுகள் நாடாளுமன்றத்தில் அல்லாமல் ராணுவத் தலைமையகத்தில் எடுக்கப்படும்.
வெளியுறவுக் கொள்கை, அணுசக்தி கட்டளை, உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு அரசியல் ஆகியவை ராணுவ அமைப்பின் கீழ் இயங்கும். இதுதான் முறைப்படி ஆட்சி செய்யாமல் நாட்டை ராணுவம் ஆட்சி செய்வதாகும்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் இத்தகைய மென்மையான ஆட்சிக் கவிழ்ப்புக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளதாக கூறப்படுகிறது.
2022-ல் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கும், ராணுவத்திற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்குப் பிறகு, அசிம் முனீர் தனது அதிகாரத்தை சீராக விரிவுபடுத்திவந்துள்ளார்.
இம்ரானைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்றி அவரைச் சிறையில் அடைத்தது- PTI கட்சி மீதான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டது- பொதுமக்கள் மீதான இராணுவ விசாரணைகளை மேற்கொண்டது. 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக PTI கட்சியை ஓரங்கட்டியது. எதிரிகளாக இருந்த பிஎம்எல்(என்) மற்றும் பிபிபி கட்சிகளை ஒரு தற்காலிக கூட்டணி அமைக்க வைத்தது.
ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு தன்னைத்தானே ‘ஃபீல்ட் மார்ஷல்’ (Field Marshal) பதவிக்கு உயர்த்திக்கொண்டு தனது அதிகாரப் பலத்தை அதிகரித்தது என அசீம் முனீர் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
இவை அனைத்தும், பாகிஸ்தான் மீது முழுமையான கட்டுப்பாட்டை 58 வயதாகும் அசிம் முனீர் மீண்டும் பெற்றுவிட்டதாகவே கூறப்படுகிறது. பிரதமர் ஷெரீப் நிர்வாகத்தை ஒரு முகத்திரையாகப் பயன்படுத்திக்கொண்டு, அசிம் முனிரே திரைமறைவில் அனைத்தையும் இயக்கும் முக்கிய சக்தியாகச் செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் முனீர் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்ட அதே காலகட்டத்தில்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் அரசியல் வளர்ச்சியும் நிகழ்ந்தது.
அரசியல் அனுபவம் இல்லாத போதும், பத்திரிகையாளராக இருந்த நக்வியை அதிகார மையங்களை ஆட்டுவிக்கும் செல்வாக்கு மிக்க நபராக கொண்டுவந்ததே அசிம் முனீர் தான் என்று கூறப்படுகிறது.
செனட் வழியாக நாடாளுன்றத்துக்குள் நுழைந்து ஷெரீப்பின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக்கப்பட்ட நக்வி, ‘ஃபீல்ட் மார்ஷல்’மற்றும் பிரதமர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தப் படி நாட்டின் அதிகபட்ச அதிகாரம் கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
பாகிஸ்தான் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபடும் அசிம் முனீர், பருவமழை காலத்திற்கான நாட்டின் தயார்நிலை குறித்தும் ஆய்வு செய்கிறார். பாகிஸ்தானின் அணுசக்தி கட்டளை அமைப்பைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அசிம் முனீர், முப்படைகளின் நடைமுறைத் தலைவராகவும் உள்ளார். சொல்லப்போனால் இப்போதே ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனிர் தான் பாகிஸ்தானின் ஆட்சியாளர்.
கிட்டத்தட்ட பாகிஸ்தானையே தனது கட்டுப்பாட்டில் அசிம் முனீர் வைத்துள்ள நிலையில் அவருக்கு மிக நெருக்கமான நக்வி பாகிஸ்தானின் நிர்வாக அமைப்பு “சரிந்துவிட்டது” என்றும் ,நாடு இனி வழக்கமான நடைமுறைகளைத் தொடர முடியாது என்றும் கூறியிருப்பது பாகிஸ்தானில் மீண்டும் இராணுவ ஆட்சி ஏற்பட போகிறதா ? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
பொருளாதாரச் சீரழிவு, பலூசிஸ்தான், கைபர் பக்துன்க்வா மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அரசுக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
ராணுவத்தின் வன்முறை ஒடுக்குமுறைகளை மறைக்க சர்வதேச ஊடகங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதிருப்தி காரணமாக பாகிஸ்தான் ராணுவத்தில் இருந்து விலகி யூடியூபராக மாறிய அடில் ராஜா, தற்போதைய அரசியல் கட்டமைப்பை மாற்றுவதற்கான திட்டத்தை ராணுவம் இறுதி செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
ஜனநாயக முகமூடியை தக்கவைத்துக்கொண்டே, அசிம் முனீர் அதிபராகவும் நக்வி பிரதமராகவும் மாறக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சமீபத்தில் ஏழு மணி நேரம் நடந்த ஐஎஸ்ஐ கூட்டத்தில் இருந்ததாகக் கூறப்படும் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவத் தலைமை, நாட்டின் தற்போதைய அமைப்பு “சரிந்துவிட்டது” என்று முடிவு செய்து, ஒரு புதிய அரசியல் ஒழுங்கிற்குத் தயாராகி வருவதாக அடில் ராஜா கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்திற்கு அரசியல் ஆதரவைத் திரட்டும் பணி நக்வியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அரசியலமைப்பு மாற்றங்கள் “தேவைப்பட்டால் பலவந்தமாக” திணிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது மகனும் பிபிபி தலைவருமான பிலாவல் பூட்டோ சர்தாரி ஆகியோருக்கு “பாகிஸ்தானிலிருந்து பாதுகாப்பாக வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்போது, பாகிஸ்தானில் ஆட்சிக்கவிழ்ப்பு என்பது தான் ஒரே கேள்வியாக உள்ளது.
















