இலவச ரேஷன் அரிசியை திமுக முன்னாள் அமைச்சர் உள்பட நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் 4 ஆயிரம் இடங்களில் நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன என்றும், திமுக ஆட்சியில் அரிசி ஆலைகள் உயர்த்தப்பட்டு பழுப்பு இல்லாத அரிசி வழங்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.
இதற்கு பதலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, 5 ஆண்டு கால ஆட்சியை 3 மாதத்துடன் ஒப்பிடலாமா என்றும், ஒப்பீடு நியாயமானதா எனவும் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் விஜய் முதல்முதலாக பரந்தூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார் எனவும் கூறினார்.
தவெக ஆட்சியில் 5 ஆயிரத்து 932 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், விவசாய சங்கங்களை அழைத்து பேசி நெல், கரும்புக்கான விலையை உயர்த்தி உள்ளதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டு இருப்போமா, ரேஷன் அரிசியை முன்னாள் அமைச்சர் சக்கரபாணி சாப்பிட்டுள்ளாரா என கேள்வி எழுப்பினார்.
மேலும், விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக தவெக ஆட்சி இருக்கும் எனவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, வட மாவட்டங்களில் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது என்பது உண்மைதான் என கூறினார். கரும்பு தயாரிப்பு விலையும் விற்பனை விலையும் ஒத்துப்போகவில்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து சர்க்கரை இறக்குமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.
இதனை அடுத்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தவெக ஆட்சியில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு முதல் மாநிலமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
















