பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் என்றும், ஆனால் எந்த மாற்றமும் இல்லை எனவும் திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் கூறியதாகவும், அதன்படி, வேளாண் பட்ஜெட்டில் மாற்றம் இருக்கும் என்று பார்த்தால் ஏமாற்றம்தான் இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் இருந்தபோது செய்தித்தாள், தொலைக்காட்சியை பார்த்துவிட்டு துறை அமைச்சரை தொடர்புகொண்டு காலையில் 4 மணிக்கு பேசுவார்கள் எனவும் கூறினார். 5 ஆண்டு காலம் தாங்கள் டென்ஷனாக இருந்ததாகவும், தற்போது அமைச்சர்கள் ரிலாக்ஸாக இருப்பது எப்படி என்று தெரியவில்லை எனவும் குறிப்பிட்டார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் என்.ஆனந்த், ஒரு வாய்க்கால் பிரச்னைக்கு கூட போன் செய்து சரியாகிவிட்டதா என்று முதலமைச்சர் கேட்பார் என்றும், அமைச்சர்கள் தினந்தோறும் டென்ஷனில்தான் இருக்கிறோம் எனவும் கூறினார். மேலும், ஒவ்வொரு பிரச்னையிலும் பயத்தில் இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த் கூறினார்.
தொடர்ந்து பேசிய எம்ஆர்கே பன்னீர்செல்வம், கூட்டங்களில் திமுகவை எதிர்த்து பேசுவது எளிது என்றும், இனிமேல்தான் இருக்கிறது எனவும் கூறினார். தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம் இன்றி 5 ஆண்டு காலம் இருந்தது எனவும் திமுக எம்எல்ஏ எம்ஆர்கே பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டாஸ் போடப்பட்டது என சுட்டிக்காட்டினார். மேலும், விவசாயிகள் மீதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
















