இந்தியாவின் தேர்தல் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் வாக்காளர்களுக்கு கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், மாத தொடக்கத்தில் இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமெரிக்க நிர்வாகத்திடம் ஒரு கேள்வியை எழுப்பினார் என குறிப்பிட்டுள்ளார். செல்லுபடியாகும் புகைப்பட அடையாள அட்டை இல்லாமல் அமெரிக்காவில் எப்படித் தேர்தல்களை நடத்த முடியும் என வினவியதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவில் கடந்த மக்களவைத் தேர்தலில் சுமார் 64 கோடியே 60 லட்சம் பேர் வாக்களித்ததாகவும், அவர்களில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களே தபால் மூலம் வாக்களித்ததாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாக்காளர்களுக்குக் கட்டாயப் புகைப்பட அடையாள அட்டை வேண்டும் எனக்கூறியுள்ள அதிபர் டிரம்ப், Save America Act என்ற சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் மோசடியை தடுக்க இந்தச் சட்டம் தேவை எனவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
















