எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் எதுவும் கலக்கப்படவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூடியதும், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அப்போது, லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாக தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாமக உறுப்பினர் கணேஷ், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நீர்வளம், சுற்றுச்சூழல், கடல்வளம் மட்டுமின்றி மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ், கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் செத்து மிதந்தது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், ரசாயனக் கழிவுகள் எதுவும் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, 10 நாட்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
















