ஊழல் கோப்புகளை முதலமைச்சர் ஏன் திறக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவையை பேரவைத் தலைவர் சிறப்பாக நடத்துவதாகவும், எதிர்க்கட்சிக்கும் வாய்ப்பு வழங்குவதாகவும், ஆனால் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் உதயநிதி கூறினார்.
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளுங்கட்சி அமைச்சர்கள் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்கி பேரவைத் தலைவர் வரலாறு படைத்துள்ளதாகவும் தெரிவித்தார். அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அனைத்தும் நேரலையில் சென்று விடுவதாகக் கூறிய அவர், முதலமைச்சர் ஊழல் கோப்புகளை எப்போது திறப்பார் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எ.வ.வேலு கூறியதைப் போல, மிசாவை பார்த்தது திமுகதான் என்றும், அப்படிப்பட்ட இயக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்று, தவெக என்றால் என்ன என்பதை இந்தத் தேர்தலில் காட்டியுள்ளதாகவும் கூறினார். மேலும், இத்தனை ஆண்டுகளாக சட்டப்பேரவை நிகழ்வுகளை ஏன் நேரலை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, ஜோதிடம் பார்த்து மஞ்சள் துண்டு அணிந்தவர்களை தமிழ்நாடு பார்த்திருக்கிறது என சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் காரசாரமாகப் பதிலளித்தார்.
ஊழல் கோப்புகள் தயாராக இருப்பதாகத்தான் முதலமைச்சர் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் பேச்சுக்கு பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கமளித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், ஊழல் கோப்புகளைத் திறக்க வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை முதலமைச்சர் நிச்சயம் நிறைவேற்றுவார் என தெரிவித்தார்.
















