இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் புதிய அத்தியாயமாக உலகின் மிகப்பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் ஆழ்கடல் துறைமுகமான கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தில் முழுமையான ஏற்றுமதி–இறக்குமதி EXIM செயல்பாடுகள் தொடங்கியுள்ளன. இதன் மூலம் வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருந்த இந்தியாவின் கண்டெய்னர் வர்த்தகத்திற்கு மாற்று வழி கிடைத்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள விழிஞ்சம்…சர்வதேச கப்பல் பாதையிலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவு…18 முதல் 20 மீட்டர் இயற்கை ஆழம்…
உலகின் மிகப்பெரிய Ultra Large Container Vessels எனப்படும் ULCV கப்பல்களைக் கையாளும் திறன்…இதுவே விழிஞ்சத்தின் மிகப்பெரிய பலம். 2024 டிசம்பர் முதல் வணிகச் செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் இதுவரை 2.28 மில்லியனுக்கும் அதிகமான TEU சரக்குகளையும், 1,100-க்கும் மேற்பட்ட கப்பல்களையும் கையாண்டுள்ளது. 24,346 TEU திறன் கொண்ட உலகின் மிகப்பெரிய கண்டெய்னர் கப்பல்களில் ஒன்றான MSC Irina கப்பலையும் விழிஞ்சம் வெற்றிகரமாக கையாண்டுள்ளது.
இதுவரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பல கண்டெய்னர் சரக்குகள், இந்தியாவுக்கு வரும் சரக்குகள், இடைத்துறைமுகங்களாக செயல்படும் வெளிநாட்டு துறைமுகங்கள் வழியாக மறுஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.
குறிப்பாக கொழும்பு உள்ளிட்ட வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருக்கும் நிலை இருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு விழிஞ்சம் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தபோது, இந்தியாவின் சுமார் 75 சதவீத transshipment நடவடிக்கைகள் வெளிநாட்டு துறைமுகங்களில் நடைபெற்றதாகவும், இதனால் நாட்டிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இப்போது அந்த நிலை மாறுகிறது. விழிஞ்சத்தில் EXIM செயல்பாடுகள் தொடங்கியிருப்பதன் மூலம் இந்திய சரக்குகள் இந்திய துறைமுகத்திலேயே நேரடியாக ஏற்றுமதி–இறக்குமதி செய்யப்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் உருவாகும் மதிப்பில் ஒரு பெரிய பகுதி இந்தியாவுக்குள்ளேயே தங்கும் வாய்ப்பு உருவாகிறது.வெளிநாட்டு transshipment துறைமுகங்களைச் சார்ந்திருந்தது குறைகிறது..
விழிஞ்சத்தில் EXIM செயல்பாடுகள் தொடங்கியிருப்பதன் மூலம் இந்திய சரக்குகளை நேரடியாக உலக சந்தைகளுக்கு அனுப்புவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி போட்டித்திறன் அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் சதீஷன் தெரிவித்துள்ளார்.
விழிஞ்சத்தின் பலன் கேரளாவுடன் நின்றுவிடவில்லை. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் தொழில் வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்பை உருவாக்குகிறது.கோயம்புத்தூர், திருப்பூர், பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய தொழில் மற்றும் உற்பத்தி மையங்களிலிருந்து உலக சந்தைகளுக்கு சரக்குகளை அனுப்புவதற்கான புதிய கடல் வழியாக விழிஞ்சம் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார் விழிஞ்சம் துறைமுகத்தை நிர்வகிக்கும் அதானி போர்ட்ஸ் சிஇஓ அஸ்வனி குப்தா.
விழிஞ்சம் துறைமுகத்தில் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாம் கட்ட விரிவாக்கம் நடைபெற உள்ளது. இந்த விரிவாக்கம் 2028 டிசம்பருக்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு துறைமுகங்களைச் சார்ந்திருந்த இந்தியாவின் கண்டெய்னர் வர்த்தகத்திற்கு விழிஞ்சம் ஒரு புதிய மாற்று வழியைத் திறந்துள்ளது. தென்னிந்தியாவின் தொழில் உற்பத்தியை உலக சந்தையுடன் இணைக்கும் புதிய கடல் வாசலாக உருவெடுத்துள்ளது.
















