பிரபல ஹாலிவுட் இயக்குனரும் நடிகரும், தயாரிப்பாளருமான (Rob Reiner) ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி (Michele Singer Reiner) மிஷேல் ரெய்னர் ஆகிய இருவரும் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில்,’Trump derangement syndrome’ “ட்ரம்ப் டிரேஞ்ச்மென்ட் சிண்ட்ரோம்” காரணமாக ராப் ரெய்னர் இறந்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் பகிரங்கமாகக் கூறியுள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில், பிரபலங்கள் வசிக்கும் பிரெண்ட்வுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 78 வயது மற்றும் 68 வயதுடைய தம்பதியர் கத்தியால் குத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாக வந்த தகவலை அடுத்து சடலங்களை மீட்ட காவல் துறையினர் அவர்கள், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ராப் ரெய்னர் மற்றும் அவரது மனைவி மிஷேல் ரெய்னர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஹாலிவுட்டின் நகைச்சுவை ஜாம்பவான் என்று போற்றப்படும் கார்ல் ரெய்னரின் மகனான ராப் ரெய்னர், 1989-ம் ஆண்டு When Harry Met Sally (“வென் ஹாரி மெட் சாலி”) படத்தை இயக்கும் போது புகைப்படக் கலைஞராக இருந்த Michele Singer Reiner-ரைச் சந்தித்து காதலித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதியருக்கு நிக், ஜேக் மற்றும் ரோமி என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
எதிர்பாராத திடீர் திருப்பமாக, இந்தக் கொலையில் , ராப் ரெய்னரின் மகனான 32 வயதான நிக் ரெய்னரைச் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர்க் கைது செய்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இரவு பிரபல ஹாலிவுட் நடிகர் கோனன் ஓபிரையன் வழங்கிய இரவு விருந்தில் பங்கேற்றபோது, நிக் ரெய்னருக்கும் அவரது பெற்றோருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதைத் தொடர்ந்து, சில மணிநேரங்களில் அவர்கள் கொல்லப் பட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
முன்னதாகப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி 15 வயதிலேயே மறுவாழ்வு மையத்தில் நிக் ரெய்னர் சேர்க்கப்பட்டுச் சிகிச்சைபெற்று வந்தார். 2016 ஆம் ஆண்டு வெளியான (BEING CHARLIE ) “பீயிங் சார்லி” என்ற திரைப்படத்தில் ராப் மற்றும் நிக் ரெய்னர்ப் போதைப்பழக்கம் குறித்து விரிவாக அலசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
1971ல் நடிகராகத் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பல வெற்றிப்படங்களைத் தந்த இயக்குனரும் தயாரிப்பாளருமான ராப் ரெய்னர் நான்கு முறைச் சிறந்த இயக்குநருக்கான கோல்டப் குளோப் விருதை வென்றுள்ளார். ராப் ரெய்னர் மற்றும் மிஷேல் ரெய்னரின் திடீர் இழப்பால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் நம்பமுடியாத கடினமான நேரத்தில் தங்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவரது குடும்ப செய்தித் தொடர்பாளர் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் ராப் ரெய்னரின் மரணம் குறித்து அதிபர் ட்ரம்பின் பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.
“ரெய்னர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும், ட்ரம்ப் மனச்சிதைவு நோயால் அவர்கள் கொண்டிருந்த குணப்படுத்த முடியாத பாதிப்பின் மூலம் மற்றவர்களுக்கு ஏற்படுத்திய கோபத்தின் விளைவாகவே கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.” என்று ட்ரம்ப் கூறியுள்ளார். மேலும், தம் மீதான தீவிர கோபத்தால் ரெய்னர் மக்களைப் பைத்தியக்காரர்களாக ஆக்கியவர் என்றும், தனது நிர்வாகத்தின் வெற்றியைச் சகிக்க அதிகப்பட்சச் சித்தப்பிரமைக்கு ஆளானவர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ரெய்னரின் அரசியல் கருத்துக்களுக்கும், இந்தக் கொலைகளுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகக் காவல்துறை தெரிவிக்காத நிலையில் அதிபர் ட்ரம்ப் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பதற்கு, அவரது சொந்தக் கட்சியினர் தொடங்கி ஹாலிவுட் பிரபலங்கள் வரைச் சமூகத்தின் பல்வேறு துறைகளின் வல்லுனர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராப் ரெயினரை மணம் முடிப்பதற்கு முன், 1987ம் ஆண்டு அதிகம் விற்பனையான ட்ரம்பின் முதல் புத்தகமான ‘தி ஆர்ட் ஆஃப் தி டீல்’ புத்தகத்தின் அட்டைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரம்பின் புகைப்படத்தை எடுத்தவர் மிஷேல் என்பது குறிப்படத்தக்கது. அடிக்கடி ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்த ராப் ரெய்னர், அக்கட்சிக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். தீவிர ஜனநாயக வாதியாக இருந்த ராப் ரெய்னர், ட்ரம்ப் மீண்டும் பதவிக்கு வந்தால், அது ஜனநாயகத்துக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.
2017ம் ஆண்டே துபாய் சர்வதேச திரைப்பட விழாவின் போது, அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு முற்றிலும் தகுதியற்ற ஒரே மனிதர் ட்ரம்ப் தான் என்றும், அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதை அவர்ப் புரிந்துகொள்ளவில்லை என்றும் புரிந்து கொள்ளவும் டிரம்புக்கு ஆர்வமில்லை என்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் சமூக ஊடகப் பிரபலமான கிர்க் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கருத்து வேறுபாடு கொண்டவர்களை அரக்கர்களாகச் சித்தரிப்பதன் சோகமான விளைவு தான் கிர்க் கொல்லப்பட்டதற்குக் காரணம் என்றும் ட்ரம்ப் கூறினார். மேலும், கிர்க்கின் நினைவஞ்சலிக் கூட்டத்தில், தமது எதிரிகளை வெறுப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக 2022-ல், முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை, அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த நபர் சுத்தியலால் தாக்கிய போதும் ட்ரம்ப் இதுபோலவே கருத்து தெரிவித்திருந்தார்.
















