உத்தர பிரதேசத்தில் கணவரை கொலை செய்து உடலைத் துண்டு துண்டாக வெட்டி மறைத்த மனைவி மற்றும் அவரது காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி என்பதை விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
உத்தரப்பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்தில் காதலனுடன் சேர்ந்து மனைவியே சொந்த கணவரைக் கொலை செய்த சம்பவத்தை போலீசார் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர். இந்த வழக்கில் மனைவி ரூபி மற்றும் காதலன் கவுரவ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை கடந்த நவம்பர் 24-ம் தேதி தொடங்கியது.
அன்றைய தினம் தனது கணவர் ராகுல் காணாமல் போய்விட்டதாக ரூபி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்த 21 நாட்களுக்குப் பின் டிசம்பர் 15-ம் தேதி, பட்டுருவா சாலையில் உள்ள ஈக்தா பகுதிக்கு அருகே, கருப்பு பையில் கை, கால்கள் மற்றும் தலையின்றி சிதைந்த நிலையில் இருந்த உடற்பகுதியை போலீசார் கண்டெடுத்தனர்.
அந்த உடல் யாருடையது என அடையாளம் காண முடியாத நிலையில் இருந்தாலும், பிரேத பரிசோதனையின்போது அந்த உடலில் “ராகுல்” என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்தது போலீசாரின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து காணாமல் போனவர்கள் பட்டியலை போலீசார் ஆய்வு செய்தபோது, அதே காவல் நிலைய எல்லைக்குள் வசிக்கும் ரூபி என்ற பெண் அளித்த புகாரில் “ராகுல்” என்ற பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது உடலுடன் கிடைத்த உடைகள், தனது கணவருடையது அல்ல என ரூபி மறுத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அவரது வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகள் போலீசாருக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்தின. பின்னர் ரூபியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, உடலில் கிடைத்த அதே ஆடை அணிந்த ஒருவருடன் ரூபி நிற்கும் புகைப்படங்கள் போலீசாருக்கு கிடைத்தன.
அதனை ஆதாரமாகக் காட்டி ரூபியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தான் செய்த கொடூர குற்ற செயலை அவர் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. கடந்த நவம்பர் 18-ம் தேதி இரவு காதலன் கவுரவுடன் ரூபி தனிமையில் இருந்தபோது, திடீரென வீட்டிற்கு வந்த கணவர் ராகுல் இருவரையும் ஒன்றாகக் கண்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆத்திரமடைந்த இருவரும் வீட்டிலிருந்த கனமான பொருளால், ராகுலை அடித்துக் கொலை செய்ததாக ரூபி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர்கள் ராகுலின் உடலை மறைக்கக் கட்டர் இயந்திரம் மூலம் தலை, கை, கால்களைத் தனித்தனியாக வெட்டி இரு கருப்பு பைகளில் அடைத்ததும், தலை மற்றும் கை, கால்கள் இருந்த பையை கங்கை நதியில் வீசியதும், உடற்பகுதியை ஈத்கா அருகே எறிந்ததும் தொடர் விசாரணையில் அம்பலமானது.
போலீசாரின் சந்தேகத்தைத் திசை திருப்ப இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, ரூபி மூலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் வெளிச்சத்திற்கு வந்தது. அதனடிப்படையில் கொலை செய்யப் பயன்படுத்திய கட்டர் இயந்திரம் உள்ளிட்ட ஆதாரங்களை கைப்பற்றிய போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மீதமுள்ள உடல் பாகங்களை மீட்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















