இந்தியாவின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளதாக புதிய தலைமை தளபதியாக பதவியேற்றுக் கொண்ட ராஜா சுப்ரமணி தெரிவித்துள்ளார்.
முப்படை தலைமை தளபதியாக இருந்த அனில் சவுஹான் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து புதிய தலைமைத் தளபதியாக என்.எஸ்.ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய தலைமை தளபதியாக ராஜா சுப்ரமணி பொறுப்பேற்று கொண்டார்.
தேசிய போர் நினைவிடத்தில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்திய புதிய தலைமை தளபதிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், முப்படை தலைமை தளபதியாக பதவியேற்றதில் பெருமை அளிக்கிறது என தெரிவித்தார்.
ராணுவம், கடற்படை, விமானப்படை, பாதுகாப்பு அமைச்சகம் என அனைத்தையும் ஒருங்கிணைந்து, இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என கூறினார். தற்சார்பு இந்தியா நமது நாட்டின் பாதுகாப்பின் மையத் தூணாக திகழ்கிறது எனக்கூறியுள்ள அவர், நமது ஆயுதப்படைகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை சேர்ப்பதையும், பயன்படுத்துவதையும் விரைவுபடுத்துவோம் என தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதி பூண்டுள்ளோம் என என்.எஸ்.ராஜா சுப்ரமணி உறுதியளித்தார்.
















