ருமேனியாவில் வீரதீரச் செயலுடன் 5 வயது சிறுமியைக் காப்பாற்றிய இந்தியக் கட்டுமானத் தொழிலாளிக்கு அந்நாட்டின் கௌரவ குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியர்களின் துணிச்சல் மற்றும் கருணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று பாராட்டப் படுகிறது.
என்ன நடந்தது யார் அந்த கட்டுமானத் தொழிலாளி ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ருமேனியாவில் உள்ள கிரையோவா (Crayova) நகரில் நிக்கோலாய் ரோமானெஸ்கு (Nicolae Romanescu Park) பூங்கா உள்ளது.
தனது பெற்றோருடன் வந்திருந்த 5 வயது சிறுமி, விளையாட்டு ஆர்வத்தில் பனிச்சறுக்கு வண்டியிலிருந்து குதித்து உறைந்த ஏரியின் மீது ஒடத் தொடங்கினாள்.
அப்போது, ஏரியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென்று ஏரியில் உறைந்திருந்த பனிக்கட்டி உடைந்து அவள் தண்ணீருக்குள் விழுந்தாள்.
காப்பாற்றும் முயற்சியில் உடனடியாக ஏரிக்குள் இறங்கிய சிறுமியின் தந்தையும் உடைந்த பனிக்கட்டிக்கு இடையே சிக்கிக்கொண்டார். நொடிக்கு நொடி நிலைமை மோசமாவதைக் கண்ட பூங்காவில் இருந்த மக்கள் அவசரக்கால மீட்புப் பிரிவினருக்குத் தகவல் அளித்தனர்.
உறைபனி நிலவும் கடும் குளிரில் உறைந்த ஏரியின் தண்ணீரில் உயிருக்குப் போராடியபடி தத்தளித்துக் கொண்டிருந்த சிறுமியைக் கண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 47 வயதான விபன் குமார், எதைப் பற்றியும் யோசிக்காமல் உறைந்த ஏரியின் நீரில் குதித்து சிறுமியைக் காப்பாற்றியுள்ளார்.
தன் நண்பர் ஒருவருடன் நடைப்பயிற்சிக்கு வந்திருந்த விபன் குமார் துணிச்சலாக தனது செயலால், மீட்பு படையினர் வரும் வரை சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கவிடாமல் அந்தச் சிறுமியைத் தனது கைகளில் தூக்கிப்பிடித்த படியே இருந்துள்ளார்.
மீட்பு நடவடிக்கையின் இந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன. உறைந்த ஏரியில் பனிச்சறுக்கு வண்டியில் இருந்து சிறுமி குதித்து ஓடுவதும் பின்னர் சிறுமியின் கீழே இருந்த பனிக்கட்டி உடைவதும் வீடியோவில் தெரிகின்றன.
அவசரக்கால மீட்புக் குழுவினர் வரும் வரை, சிறுமியின் கையைப் பிடித்து அவளைக் குளிர்ந்த நீருக்கு மேலே வைத்திருக்கும் விபன் குமாரின் துணிச்சலும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இந்தியரின் விபன் குமாரின் சுயநலமற்ற மற்றும் மனிதாபிமானச் செயல் மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்று நம்புவதாக கூறியுள்ள அந்நகரத்து மேயர் லியா ஓல்குட்டா வாசிலெஸ்கு (Lia Olguta Vasilescu), அவருக்கு கௌரவ குடிமகன் அந்தஸ்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தான் வேலைக்காக விபன் குமார் ருமேனியாவுக்குச் சென்றுள்ளார்.
டோல்ஜ் கவுண்டியில் உள்ள மாலு மரே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கட்டுமானத் துறையில் திறன் சாராத தொழிலாளராகப் பணியில் இருக்கும் விபன் குமாருக்கு விரைவில் வசிப்பதற்கான அனுமதியும் வழங்கப்படும் என்றும் மேயர் லியா ஓல்குட்டா வாசிலெஸ்கு தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிறுமியைக் காப்பாற்றிய விபன் குமாரின் வீர தீரச் செயலைப் பாராட்டியுள்ள அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர், குமார் தனது குடும்பத்தினரைச் சந்திக்கும் வகையில் இந்தியாவுக்குச் செல்வதற்கான பயணத்தை பரிசாக வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.
வேலை தேடி ருமேனியாவுக்கு வந்து கட்டுமானத் தொழிலாளராகப் பணியாற்றி வரும் குமாருக்கு எட்டுவயதில் ஒரு மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத் தக்கது.
சமயோசித புத்தி மற்றும் துணிச்சல் காரணமாக சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு நாட்டின் நகரத்தில் மிகவும் போற்றப்படும் குடிமகனாக மாறியுள்ளார் விபன் குமார்.
விபன் குமாரின் மனிதாபிமான செயல் இந்தியாவின் ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உயரிய கோட்பாட்டையும் பறைசாற்றுகிறது.
















