பிரதமர் மோடியின் செஷல்ஸ் பயணம் அந்நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ரோந்து கப்பல், ராணுவ ஆலோசகர்கள் நியமனம் என இரு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இதுதொடர்பாக விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்….
இந்திய பெருங்கடலில் தீவு நாடாக அமைந்துள்ள செஷல்ஸிற்கு மூன்று நாட்கள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி சென்றார். இந்தப் பயணம் வெறும் தூதரக சடங்காக இல்லாமல், இருநாடுகளின் பாதுகாப்பு கட்டமைப்பை வளர்ச்சிப் பயணத்தில் கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. பாதுகாப்பு ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப கூட்டாண்மை ஆகியவற்றில் ஒரு பெரிய விரிவாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய செஷல்ஸ் அரசால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தியாவின் 4 ராணுவ ஆலோசகர்கள் நியமனம், தற்போதைய பயணத்தின் மூலம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இவர்கள் 4 பேரும் அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவ நிறுவனங்களுடன் இணைந்து, திட்டமிடல் மற்றும் பயிற்சிப் பணிகளை மேம்படுத்த உள்ளனர். இந்த நடவடிக்கை இந்திய பெருங்கடல் பகுதியில் செஷெல்ஸின் முதன்மையான பாதுகாப்பு பங்காளியாக இந்தியா திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன எல்ஸ்போயர் ரோந்து கப்பல், 10 லேசர் ரேடியல் படகுகள், 5 ரோந்து வாகனங்கள் மற்றும் 6 ஆம்புலன்ஸ் வாகனங்களை செஷெல்ஸ் நாட்டிற்கு வழங்கியது இந்தியா. இதன் மூலம் அந்த நாட்டின் கடல் எல்லை கண்காணிப்பு மேலும் வலுவடையும். செஷெல்ஸ் நாட்டின் ஒட்டுமொத்த கடல் மற்றும் வான்வழிப் பாதுகாப்பு சொத்துக்களில் பாதிக்கும் மேல் இந்தியா வழங்கியவை. செஷெல்ஸ் ராணுவ வீரர்களுக்கான ஒட்டுமொத்த பயிற்சியில் 70 சதவீதத்தை இந்திய ராணுவ கல்வி நிறுவனங்களே வழங்கி வருகின்றன.
இந்த இருதரப்பு கூட்டாண்மை, பாரம்பரிய பாதுகாப்பு ஒத்துழைப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கும் பரிணமித்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை ஆழமாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
இந்தியா – செஷல்ஸ் இடையே சுமார் 1,250 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, விண்வெளி, சுகாதாரம், விவசாயம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருநாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டன.
செஷல்ஸ் உட்கட்டமைப்பு மற்றும் உணவு தேவைகளுக்காக 500 மெட்ரிக் டன் அரிசி மற்றும் 8,500 மெட்ரிக் டன் சிமெண்ட் ஆகியவற்றையும் இந்தியா வழங்கியுள்ளது.
இந்தியா இனி செஷெல்ஸ் நாட்டிற்கு சாதாரண உதவி வழங்கும் நாடு அல்ல. மாறாக, அந்நாட்டின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இதன் மூலம் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ராஜதந்திர கை ஓங்கியுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை…
















