அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மகளிர் அணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பெண் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலையில், துணை பொதுச்செயலாளர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
இந்த கூட்டத்தில், மகளிர் அணியின் செயல்பாடுகள் மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மகளிர் அணியினர் கட்சியை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும், அதிமுக ஆட்சி காலத்தில் மகளிர் நலனுக்காக என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது என்பதை மகளிர் மத்தியில் எடுத்து சொல்ல வேண்டும் என்பது குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், அதிமுக ஜனநாயகத்துடன் இயங்க கூடிய இயக்கம் என்றும், இதுபோல் திமுக இயங்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். அதிமுகவில் இருந்து துரோகிகள் வெளியேறுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதனிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க தவறிய தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து, அதிமுக மகளிர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், எதிர்வரும் சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு தொண்டர்கள் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
















