அதிமுகவில் தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பொறுப்பை ஏற்க மறுத்து எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் மீண்டும் நியமிக்கப்படவில்லை என்பதை வருத்தத்துடன் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும், சி.வி.சண்முகத்திற்கு எந்தப் பதவியும் வழங்கப்படாமல் ஒதுக்கிவைத்தது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாங்கள் உறுதியளித்தபடி கட்சிப் பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்த பதவியை வழங்காததால், கடந்த 50 நாட்களாக நிர்வாகிகள், தொண்டர்கள் சாரை சாரையாக கட்சியில் இருந்து விலகி, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருவதாக அக்கடிதத்தில் கூறியுள்ளனர்.
நீங்கள் எடுத்த தவறான முடிவுகளால் 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர் தோல்வி ஏற்பட்டு, கட்சி கரைந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 25ம் தேதி வெளியிட்ட அறிவிப்பின்படி தாங்கள் வழங்கியுள்ள கட்சிப் பதவிகளை ஏற்று கட்சிப் பணிகளில் ஈடுபடுத்திக்கொள்ள இயலாத சூழ்நிலையை உருவாக்கி உள்ளதாகவும், தாங்கள் நியமித்த பதவிகள் தங்களுக்கு வேண்டாம் என்றும், தாங்கள் கட்சி உறுப்பினர்களாக இருந்து செயல்படுவதாகவும் அந்தக் கடிதத்தில்
நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.
















