இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருட்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடுகளை பெற்றிருக்கும் மாநிலங்களில் பட்டியலில் முதலிடத்தில் தமிழகம் உள்ளது.
இதுவரை மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடி சேலை, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், நெகமம் காட்டன், மயிலாடி கற்சிற்பம், சேலம் ஜவ்வரிசி, மானாமதுரை மண்பாண்டம், ஊட்டி வர்க்கி, கம்பம் பன்னீர் திராட்சை, ஆத்தூர் வெற்றிலை, சோழவந்தான் வெற்றிலை உள்ளிட்ட 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, ஜடேரி நாமக்கட்டி, மட்டி வாழைப்பழம் ஆகிய 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சையில் அரசு வழக்கறிஞர் சஞ்சய் காந்தி அளித்த பேட்டியில், திருநெல்வேலி மாவட்டம் வீரவாநல்லூர் செடி புட்டா சேலை, திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி வாழைப்பழம் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டுதான் முதன்முதலில் புவிசார் குறியீட்டை பெற்றது. அதற்கான முயற்சியை முன்னெடுத்து, சாத்தியமாக்கி காட்டியவர் சஞ்சய் காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இதுவரை 58 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மேலும் 14 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.