தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 2 நாள் பயணமாக திருவண்ணாமலைக்குச் சென்றிருக்கிறார். தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து நேற்று திருவண்ணாமலைக்கு வந்த ஆளுநருக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் புத்தகம் கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதுக்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “பாரத நாடு என்பது மற்ற நாடுகளைப் போல ஆதிக்க சக்திகளால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக, சாதுக்கள், ரிஷிகளின் தவ வலிமையினால் உருவாக்கப்பட்டது. சனாதன தர்மம் என்பது தனி ஒருவருக்கானது அல்ல. பாரத நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவானது. நான், எனது என்றில்லாமல் நாம், நமது என்பது தான் சனாதனம். சமீபகாலமாக சனாதனம் அழிவுகளைச் சந்தித்து வருகிறது.
பாரத நாடு 1947-ம் ஆண்டுதான் உருவானதாக பலரும் கருதுகிறார்கள். ஆனால், பாரத நாடு எப்போதோ உருவாகி விட்டது. சுதந்திரம் மட்டுமே 1947-ல் பெற்றோம். தமிழகத்தில் ஏராளமான இடங்களை நான் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அந்த அடிப்படையில் சொல்கிறேன், பாரத நாட்டின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடுதான். இதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்.
அதேபோல, திருவண்ணாமலை மிகப்பெரிய ஆன்மிக பூமி. இங்கு கிரிவலப் பாதையில் அசைவ உணவுக் கடைகள் இருப்பதைக் கண்டேன். அசைவ உணவு சாப்பிட விரும்புவர்கள் எங்கு வேண்டுமானாலும் போய் சாப்பிடலாம். அதற்குக் கிரிவலப் பாதை உகந்த இடமில்லை. ஆகவே, கிரிவலப் பாதையில் உள்ள அசைவ உணவுக் கடைகளை அகற்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து, சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கியவர், பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள வள்ளலார் ஆசிரமத்தில் தமிழ்நாடு பாரதீய கிசான் சங்கம் சார்பில் நடந்த விவசாயிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது, அரங்கில் அமைக்கப்பட்டிருந்த இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்டிருந்த விளைபொருட்களைப் பார்வையிட்டார். பிறகு, தனது குடும்பத்தினருடன் இரமணாஸ்ரமம் மற்றும் யோகி ராம்சுரத் ஆசிரமத்தில் தரிசனம் செய்தார்.