அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார்.
இந்தப் புதிய உத்தரவின்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது தடை செய்யப்படும் எனவும் மற்ற துறைகளில் முதலீடு மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டது.
உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்நிலையில் தற்போது சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருக்கும் செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “அமெரிக்காவின் வளத்தையும், துறைசார் அறிவையும் பயன்படுத்தி சீனா தன்னுடைய தொழில்நுட்பம் மற்றும் ராணுவக் கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது மேலும் இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும். சீனாவின் தொழில்நுட்ப முன்னகர்வை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடு அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இந்த உத்தரவு குறித்து மக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2021-ம் ஆண்டில் சீன நிறுவனங்களில் அமெரிக்காவின் முதலீடு 32.9 பில்லியன் டாலராக இருந்தது. ஆனால் 2022-ம் ஆண்டில் அது 9.7 பில்லியன் டாலராக குறைந்தது. தற்போது 1.2 பில்லியன் டாலர் அளவிலேயே சீன நிறுவனங்களில் அமெரிக்கா முதலீடு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வந்தால், சீனாவில் அமெரிக்காவின் முதலீடு பல மடங்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.