மதுபான கொள்கை வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க அதிகாரிகள் 21ஆம் தேதி இரவு கைது செய்தனர். பின்னர் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். இதனைத்தொடர்ந்து 22ஆம் தேதி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்வி ராஜு, குற்றத்தின் மூலம் கிடைத்த வருமானம் 100 கோடி ரூபாய் என்றும், ரூ. 45 கோடி ஹவாலா மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும், அந்தப் பணம் கோவா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் வாதிட்டார்.
இந்த வழக்கின் மூளையாக அரவிந்த் கெஜ்ரிவால் செயல்பட்டதாகவும், எனவே 10 நாட்கள் விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து எந்த உத்தரவும் பிறப்பிக்காமல் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.