தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதனையடுத்து தொகுதிக்கு தொடர்பு இல்லாத அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் அனைவரும் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி இனி பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தவும், சின்னத்தை முன்னிறுத்தி பரப்புரை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்காக நேற்று மாலை 6 மணி முதல், மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. சமூகவலைதளங்கள், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என எந்த விதத்திலும் பரப்புரை செய்யக் கூடாது எனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. மேலும், அரசியல் கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் குறித்த கருத்துக்கணிப்புக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
















