தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டில் திமுகவினரின் பணப்பட்டுவாடாவை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நாதக வேட்பாளர் திருமுருகன் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக வாக்காளர்களுக்கு தலா 3000 ரூபாய் வீதம் திமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக மொத்தம் நால்வரை பிடித்து நாம் தமிழர் கட்சியினர் போலீசில் ஒப்படைத்தனர்.
இந்நிலையில் புகார் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி ஒரத்தநாடு புதூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திமுக வேட்பாளர் தரப்பில் பணம் விநியோகிப்பதை தடுக்கத் தவறியதாக அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
மறியல் காரணமாக தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பின்னும் மறியலை கைவிட மறுத்ததையடுத்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் திருமுருகன் உட்பட 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
முன்னதாக ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர் பணப்பட்டுவாடா செய்து கொண்டிருந்தபோது, நாம் தமிழர் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் விரட்டிச் சென்று கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் தேர்தல் பறக்கும் படையினரிடம் அவர்களை ஒப்படைத்து நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். திமுக வேட்பாளர் வைத்திலிங்கம் வாக்காளர்களுக்கு மூன்றாயிரம் ரூபாய் வரை தருவதாகவும், எனவே அவரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
















