ஜனநாயகன் திரைப்படத்தை இணையதளத்தில் கசியவிட்ட விவகாரத்தில் எடிட்டருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாதென, சென்னை உயர்நீதிமன்றத்தில், தயாரிப்பு நிறுவனம் சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டுமென ஃப்ரீலான்சிங் எடிட்டரான திருவேற்காட்டைச் சேர்ந்த உமா சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ஜனநாயகன் திரைப்படம் வெளியானதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும்,உண்மைக் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அப்பாவியான தன்னை வழக்கில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, முன்ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்ய இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.முக்கிய நபரான இவர், திரைப்படம் சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியான பிறகு இதயநோய் எனக்கூறி மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாகவும், அவருக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாதெனவும் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கில் இடையீட்டு மனு தாக்கல் செய்ய தயாரிப்பாளர் தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
















