சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக ஏராளமானோர் சொந்து ஊருக்கு செல்ல படையெடுத்துள்ளதால் விமான டிக்கெட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில்,
தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களின் டிக்கெட்டுகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை – தூத்துக்குடி செல்லும் விமான டிக்கெட்டின் விலை 5 ஆயிரத்து 354 ரூபாயில் இருந்து 17 ஆயிரத்து 527 ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர்.
சென்னை – மதுரை செல்லும் விமான டிக்கெட்டின் விலை 6 ஆயிரத்து 670 ரூபாயில் இருந்து 13 ஆயிரத்து 320 ரூபாயாகவும் சென்னை – திருச்சி செல்லும் விமான டிக்கெட்டின் விலை 3 ஆயிரத்து 677 ரூபாயில் இருந்து 14 ஆயிரத்து 237 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
சென்னை – கோவை செல்லும் விமான டிக்கெட்டின் விலை 4 ஆயிரத்து 634 ரூபாயில் இருந்து 16 ஆயிரத்து 339 ரூபாயாகவும், சென்னை – சேலம் செல்லும் விமான டிக்கெட்டின் விலை 3 ஆயிரத்து 319 ரூபாயில் இருந்து 12 ஆயிரத்து 27 ரூபாயாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்கள் இல்லாததால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
















