குற்ற வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மோசடி வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடார் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மட்டும் வாக்களிக்க அனுமதிக்கலாம் என மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில், ஹரிநாடாருக்கு எதிராக மூன்று குற்ற வழக்குகள் உள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களும், குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளவர்களும் வாக்களிக்க முடியாது என தெளிவுபடுத்தினர்.
இந்த சட்டப்பிரிவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளதாக கூறி, ஹரி நாடாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















