அனைவரும் கட்டாயம் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு குடும்பத்தினருடன் வருகை தந்து வாக்களித்தார். முதலமைச்சரை தொடர்ந்து அவரது மனைவி துர்கா மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை போன்று அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில், எடப்பாடி தொகுதி அதிமுக வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்துடன் வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், தேர்தலில் வாக்களிக்க பெரும் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார். மேலும், அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனநாயக திருவிழாவில் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக சட்டப்பேரவையில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்க தன்னை போன்றவர்களுக்காக வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். ஜனநாயக முறையில் வாக்களித்தால் சாதாரண குடிமக்கள் உயர் பதவிக்கு வரலாம் என்பதற்கு தாமே சான்று என கூறினார்.
சென்னை தி.நகரில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக தலைவர் அன்புமணி தனது குடும்பத்தினருடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்று தமிழகம் சுதந்திரம் பெறுவதாக உணர்கிறேன் என குறிப்பிட்டார். மேலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று சென்னை மந்தைவெளியில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மாநில துணை தலைவரும், நடிகையுமான குஷ்பு, தனது கணவர் சுந்தர் சி மற்றும் மகளுடன் சென்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆர்வத்துடன் வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
சென்னை அடையாறில் உள்ள வாக்குச்சாவடியில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மக்கள் என்டிஏ கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பள்ளியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்டிஏ கூட்டணியின் வெற்றியை மக்கள் உறுதி செய்வார்கள் என்று நம்புவதாகவும் வளர்ச்சியான மற்றும் பாதுகாப்பான தமிழகம் உருவாக வேண்டும் என்று மக்கள் நினைப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது வாக்கினை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளில் வாழும் நமது சொந்தங்களில் சிலர் ஆர்வமாக வாக்களித்து வருவதாகவும், சிலரால் வரமுடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தார். காவல்துறையினருக்கு போன்று தபால் வாக்கு வாய்ப்பை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். ஜனநாயக நாட்டில் நமக்கு இருக்கும் கடைசி வலிமை, கருவி என்பது வாக்கு தான் எனக்கூறிய அவர், வாக்கு செலுத்தாமல் இருப்பதும் ஒருவித தேச விரோத குற்றம் என தெரிவித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதியுடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்றினார்.
















