மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்த நிலையில், 2வது கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இன்றைய தினம் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஹவுராவில் பாஜக சார்பாக நடைபெற்ற ரோடு ஷோவில் பங்கேற்றார்.
ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் இருபுறங்களிலும் பிரதமர் மோடிக்கு வரவேற்பு அளித்தனர். ‘பாரத் மாதா கி ஜெய்’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற முழக்கங்களும், மேற்கு வங்கத் தேர்தலுக்கான பாஜகவின் முழக்கமான ‘பல்டானோ தர்கார், தை பிஜேபி சர்க்கார்’ (மாற்றத்தைக் கொண்டு வர பாஜக அரசு தேவை) என்ற வாசகங்களும் விண்ணதிர ஒலித்தன.
முன்னதாக பிரதமர் மோடி கிருஷ்ணா நகர் மற்றும் மதுராபூரில் பிரச்சாரம் செய்ததுடன், பேலூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கும் சென்று வழிபாடு நடத்தினார்.
கடந்த 15 ஆண்டுகளாக பொய்களை பரப்புவதும் மக்களை தவறாக வழிநடத்துவது உள்ளிட்ட வேலைகளை திரிணாமுல் காங்கிரஸ் செய்து வருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். கல்வி மற்றும் சுகாதாரத்துறையில் பல்வேறு பணிகளை கிடப்பில் போட்டுள்ளது இதற்கு சிறந்த சான்று என்றும் தெரிவித்தார்.
















