தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நிலவரப்படி 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுகிகளிலும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்த போதிலும், வாக்குச்சாவடியில் வரிசையில் நின்ற வாக்காளர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் வழங்கி வாக்களிக்க அனுமதித்தனர்.
இத்தேர்தலில் 85 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலை விட 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவானது தெரியவந்துள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், வேட்பாளர்களின் பூத் ஏஜெண்டுகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்றன. இதையடுத்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 92.66 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக சேலம் மாவட்டத்தில் 90.64 சதவீத வாக்குகளும், தருமபுரி மாவட்டத்தில் 90.13 சதவீத வாக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீத வாக்குகளும், நாமக்கல் மாவட்டத்தில் 89.94 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.4சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
















