தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கள்ள ஓட்டு போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பலர் வாக்களிக்க முடியாமல் திரும்பி சென்றனர்.
சென்னை பூந்தமல்லி மேல்மாநகர் அரசு பள்ளியில் அமுலு என்பவர் வாக்கு செலுத்த சென்றார். ஆனால், அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாக தெரிவித்த அதிகாரிகள், மாலை 4 மணிக்கு வந்தால் வாக்கு செலுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.
அதன்படி, அந்த பெண்மணி மீண்டும் மாலை வாக்குச்சாவடிக்கு வந்தபோது, திமுகவினர் அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என வாதிட்டனர். பதிலுக்கு, அவரை வாக்களிக்க அனுமதிக்க வேணடும் என அதிமுகவினர் தெரிவித்தனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன், அந்த பெண்மணியால் வாக்களிக்க முடியாமல் போனது.
அதேபோல், திண்டுக்கல் மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட 128வது வாக்குச்சாவடியில் வாக்களிக்க துவாரகேஷ் என்ற இளம் வாக்காளர் சென்றுள்ளார். அவரது வாக்கையும் வேறு யாரோ செலுத்திவிட்டதால், உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் டெண்டர் ஓட்டு போட வைத்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வெட்டுக்காட்டுவலசு பகுதியிலும் கள்ளஓட்டு பதிவானதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குமலன்குட்டை பகுதி வாக்குச்சாவடியில், தினேஷ் ஆறுமுகம் என்பவரது வாக்கை வேறுநபர் செலுத்திவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.
அதேபோல, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த
ஹேமலதா என்பவர், தண்ணீர் தொட்டி தெருவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க சென்றார். தனது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதை அறிந்த அவர், தனது உறவினர்களை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, அவரிடம் மனு எழுதி வாங்கிக்கொண்டு அதிகாரிகள் அவரை வாக்களிக்க அனுமதித்தனர்.
அதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையிலும் முதியவர் ஒருவர் போராடி தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பாலசுப்பிரமணி என்பவரது வாக்கை வேறு யாரோ செலுத்திவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, ஏதோதோ கூறி சமாளித்த அதிகாரிகள், முதியவரை மீண்டும் வாக்களிக்க அனுமதித்தனர்.
















