மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாள் நிகழ்வாக, மீனாட்சியம்மனின் ‘திக் விஜயம்’ வெகுவிமரிசையாக நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு மீனாட்சியம்மன் ‘திக் விஜயம்’ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இரு குழந்தைகளுக்கு அம்பாள் மற்றும் சுவாமி வேடமிட்டு இந்த நிகழ்வு நிகழ்த்திக் காட்டப்பட்டது. அஷ்டதிக் பாலகர்களை வெல்வதற்காக இந்திர விமானத்தில் அம்மன் புறப்பட்டார்.
கிழக்கு திசையில் இந்திரனையும், அக்னி மூலையான விளக்குத்தூண் சந்திப்பில் அக்னியையும், தெற்கில் எமனையும், நிருதி திசையான தெற்கு – மேலமாசி வீதி சந்திப்பில் நிருதியையும், மேற்கில் வாயுவையும், வடக்கில் குபேரனையும் வென்று, வடக்குமாசி – கீழமாசி வீதி சந்திப்பிற்கு அம்மன் வந்தார்.
ஈசானி மூலையான அங்கு சுவாமியுடன் அம்மன் போர் புரிய, சுவாமி வெற்றி பெறும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ‘திக் விஜயத்தை’ முன்னிட்டு மாசி வீதிகள் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
















