மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஸ்ரீகள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
உலகப் பிரசித்திபெற்ற ஸ்ரீ கள்ளழகர் திருக்கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுகளுடன் தொடங்கியது. இவ்விழா மே 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியாக 29-ஆம் தேதி மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் வைபவம் மே 1ம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மதுரையில் பல்வேறு வைபவங்களை முடித்துக்கொண்டு மே 5ம் தேதி அழகர் மலைக்கு மீண்டும் கள்ளழகர் திரும்புகிறார்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முதல் நாள் விழாவை முன்னிட்டு, ஆலய உட்பிரகாரத்தில் மேளதாளம் முழங்க சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் ஊர்வலமாக வந்து திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார்.
அப்போது கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கள்ளழகருக்கு வேத மந்திரம் முழங்க சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
















