இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் இருப்பதாக, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் கோணப்பட்டி ஜோதி முருகன் மலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட முருகன் சிலையை மீண்டும் வைக்கக் கோரி, செந்தில்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இங்குள்ள கோயில் பழமையானது அல்ல என்றும் ஆட்சியர் உத்தரவின் பேரில் சிலை அகற்றப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு நீதிபதி, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசு புறம்போக்கு நிலங்களில் தான் உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மனுதாரர் குறிப்பிட்ட கோயில் குன்றின் மீது வேல் இருக்கும் போது, அந்த வேலுடன் முருகன் சிலையை பிரதிஷ்டை செய்தது தவறல்ல என்று தெரிவித்தார்.
எனவே முருகன் சிலையை நிறுவ அனுமதி மறுத்து மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும், கோயிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலையை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சிலையை அவர் குறிப்பிட்ட இடத்தில் நிறுவ வேண்டும் என்றும், பக்தர்கள் திருவிழாக்களை நடத்திக்கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டார்.
















