மேற்குவங்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 91.71 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.
294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்க சட்டமன்றத்திற்கு இரண்டு கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 142 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிபூர் தொகுக்கும் தேர்தல் நடைபெற்றது.
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. சுமார் 41 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், 91.71 சதவீத வாக்குகள் பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
















